"ஜெ. கைரேகை வைக்கப்பட்ட விவகாரம்" - A.K.போஸ் புதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே. போசை, அதிமுக வேட்பாளராக அங்கீகரித்த ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை ஆதாரங்களுடன் தமிழக சுகாதார துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட கோரிய மனுவிற்கு பதிலளிக்க ஏ.கே. போசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவில் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்கள் சுகாதார துறை செயலாளருக்கு தெரியும் என்பதால், கைரேகையை சான்றளிக்க மருத்துவர் பாலாஜி நியமிக்கப்பட்டது, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்தது, அவர்களின் பேட்டி விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்க ஏ.கே.போஸ் தரப்புக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.