ஏர்செல் முன்னாள் அதிபர் சிவசங்கரன் ஐடிபிஐ வங்கியில் 470 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாததால் அவருடைய 224 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

ஐடிபி வங்கியில் 470 கோடி கடன் பெற்று அதனை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர், தொழிலதிபர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதைத்தொடர்ந்து சிவசங்கரன் மீது அமலாக்க இயக்குநரகமும் வழக்கு பதிவு செய்தது. சிவசங்கரன் நிறுவனங்கள் மேலும் 523 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகவும் சிபிஐயில் வழக்கு உள்ளது.

இந்நிலையில், பணமோசடி புகாரில் தொழிலதிபர் சிவசங்கரனின் 224.6 கோடி சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னையில் எம்.ஆர்.சி.நகர், தி.நகரில் உள்ள சிவசங்கரன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட சொத்துக்கள் சிவசங்கரனின் சிவா குழும நிறுவனங்களுக்கு சொந்தமானவை. ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சிவசங்கரன் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு கூறியுள்ளது. ஏர்செல் – மேக்ஸிஸ் விவகாரத்தில் சன் குழுமம், சிவசங்கரன் மற்றும் ப.சிதம்பரம் இடையே நீண்ட நாட்களாக வழக்கு இருந்து வந்தது குறிப்பிடத்ததக்கது.