அதிமுகவில் இருக்கும் பலரும் திமுக முகாமுக்கு செல்ல காத்திருப்பதாக கூறப்படுகிறது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அ.தி.மு.க.,வில் இணைந்த ரெட்டைமலை சீனிவாசன் பேத்தி நிர்மலா அருள்பிரகாஷுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கும் முடிவில் இருந்தார். ஆனால், உடல்நலம் குன்றி ஜெயலலிதா இறந்து விட்டதால், சசிகலாவோ, அடுத்து வந்த இரட்டை தலைமையோ நிர்மலாவை கண்டுகொள்ளவில்லை. மக்களவை தேர்தலில் 'சீட்' கேட்டும் கிடைக்கவில்லை. சட்டசபை தேர்தலிலும் அதே கதிதான். இதனால் விரக்தியான நிர்மலா அருள் பிரகாஷ், இப்போது தி.மு.க.வில் இணைய முடிவு எடுத்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதற்கு அவர் சொல்லும் காரணம் ‘'இரண்டு மலைகளுக்கு நடுவில் சூரியன் உதிக்கிற மாதிரியான கொடியை ரெட்டைமலை சீனிவாசன் அமைப்பு தான், 1929ல செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பயன்படுத்தினார்கள். அதனால், தன் தாத்தா உருவாக்கிய சின்னம் இருக்கிற தி.மு.க.,வில் தன் அரசியல் பயணத்தை தொடர முடிவு செய்திருக்கிறேன்’’என்கிறார் நிர்மலா. இது ஒருபுறம் என்றால், ''ஈரோட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தேர்தலில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டு தோற்றுப்போனார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அணுகி தி.மு.க.,வில் இணைய முயற்சி செய்து வருகிறாராம். 

ஆனால், தன்னை மாவட்ட செயலாளராக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனால், தோப்பு வெங்கடாச்சலத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி அணை போட்டுக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் தி.மு.க., முகாமில் தோப்பு வெங்கடாச்சலம் இணையலாம் என்று கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்- சசிகலா முக்கோண மோதல்களால் அதிமுகவில் இருக்கும் பலரும் திமுக முகாமுக்கு செல்ல காத்திருப்பதாக கூறப்படுகிறது. பழுத்த மரத்தை நாடித்தானே பறவைகள் செல்லும்.!