தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி மிகச் சிறப்பு.. திமுக ஆட்சியைப் புகழ்ந்து தள்ளிய அதிமுக மாஜி எம்.பி..!
தமிழகத்தில் ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று அதிமுக முன்னாள் எம்.பி. பரசுராமன் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், விஜிலா, பி.ஜி.நாராயணன், என்.ஆர்.கோவிந்தராஜ் என பலரும் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக, அமமுகவிலிருந்து பலரும் திமுகவில் சேர்ந்து வரும் நிலையில், மேலும் திமுகவில் பலர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. பரசுராமன் திமுக ஆட்சியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தஞ்சாவூரில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை கொடுத்தார்களோ, அவர் சிறப்பான ஆட்சியைத் தந்திக்கொண்டிருக்கிறார். தளபதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நானும் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். எப்போதும் இந்த ஆட்சியே தொடர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.
மக்களாட்சி தத்துவப்படி அண்ணாவின் வழிகாட்டுதல்படி அவருடைய கொள்கைகளை பின்பற்றி மிக சிறப்பாக ஆட்சி செய்கின்ற தளபதி ஸ்டாலினை வாழ்த்துவதற்கு இந்த நேரத்தில் கடமைப்பட்டுள்ளேன்.” என்று பரசுராமன் தெரிவித்தார். தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராகவும் உள்ள பரசுராமனின் இந்தப் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.