அதிமுகவின் அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்... அதிர்ச்சியில் உறைந்த திமுக..!
10 லட்சம் குடும்பங்கள் சார்ந்த ஒரு பெரிய பிரச்சனை. அதற்கு முதல்வர் தனது அறிவிப்பின் மூலம் உடனடி தீர்வு கண்டு இருக்கிறார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவும், திமுகவும் 2 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. இந்தத் தேர்தல் களத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
டிசம்பரில் தொடங்கி 5 கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் இன்னும் ஓரிரு நாட்களில் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். தமிழக தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுவது போல் தோன்றினாலும், ஆட்சியை கைப்பற்றுவதற்கான முன்னணியில் ஓடும் குதிரைகளாக அதிமுகவும், திமுகவும்தான் உள்ளன.
இந்த போட்டியில் முதன்முதலில் அதிரடி காட்டியது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். கடந்த டிசம்பர் மாத மத்தியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால் 2 கோடியே 5 லட்சம் குடும்பங்கள் பயன் அடைந்தன. இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலினும் வரவேற்றார். ஆனால் உதவித் தொகை போதாது. 5 ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருக்கவேண்டும் என்று பொது மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு கருத்தை முன் வைக்கத்தான் அவரால் முடிந்தது.
அதிமுகவின் இந்த சூப்பர் ஆட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக, திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதியும், மகளிர் அணி செயலாளர் கனிமொழியும் வேகமாக களம் இறக்கப்பட்டனர். இப்போது, ஸ்டாலினுக்கு இணையாக இவர்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் தீர்வு என்னும் புகார் பெட்டி திட்டத்தை கடந்த 29-ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கி வைத்து, அதை அத்தனை தொகுதிகளுக்கு கொண்டு செல்கிறார். அவருடைய இத்திட்டத்திற்கு பொது மக்களிடையே வரவேற்பும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே அரசு அறிவித்திருந்த 1100 என்ற தொலைபேசி திட்டத்தை முதல்வர் கையில் எடுத்தார். இந்த எண்ணில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனாக வாங்கிய 12 ஆயிரத்து110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதனால் சுமார் 16.5 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். முதல்வரின் இந்த அஸ்திரமும் தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக திரும்பும் என்பதை உணர்ந்த ஸ்டாலின், நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைத்தான் முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார் என்று தனக்கு ஆதரவாக அதை திருப்ப முயன்றார்.
விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்துவிட்டதால், தற்போது ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுவின் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து வருகிறார். இப்படி இரு தரப்பிலும் போட்டா போட்டி நடந்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கடையநல்லூரில் பேசும்போது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் தவிர்க்க முடியாத ஒரு சில வழக்குகள் தவிர அத்தனை வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிரடி காட்டினார். மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குறிப்பிட்டவை தவிர்த்து, மற்ற வழக்குகளில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுவதாகவும், முதல்வர் இந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.இதனால் 10 லட்சம் பேரின் சிக்கலுக்கு ஒரே நேரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசு, 12 ஆயிரத்து 100 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி போல, இதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய அறிவிப்பால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார், என்கிறார்கள். ஏனென்றால் இந்த அறிவிப்பை அவர் தேர்தல் வாக்குறுதியாக வெளியிடுவதற்கு முன்பாகவே முதல்வர் முந்திக்கொண்டு அறிவித்து விட்டார். 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை ஒரே நேரத்தில் ரத்து செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. அது 10 லட்சம் குடும்பங்கள் சார்ந்த ஒரு பெரிய பிரச்சனை. அதற்கு முதல்வர் தனது அறிவிப்பின் மூலம் உடனடி தீர்வு கண்டு இருக்கிறார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.