சினிமாவில் குத்துப்பாட்டுகள் இல்லை என்றால் மேடையில் பாட வேண்டிய அவசியம் இருக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சினிமாவில் குத்துப்பாட்டுகள் இல்லை என்றால் மேடையில் பாட வேண்டிய அவசியம் இருக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை, திருவிக நகரில் அதிமுகவின் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்பு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அந்த நடனம் இடம் பெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தன. இந்த நிலையில் மீன் வளத் துறை அமைச்சர் செயக்குமார், சென்னை, எழும்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக கூட்டம் ஒன்றில், முகம் சுளிக்கும் வகையில் நடனம் இடம் பெற்றது பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சமூகத்துக்கு தேவையான அனைத்து கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால், தற்போது டாடி - மம்மி வீட்டில் இல்லை... கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா... என்றும் பாடல்கள் இடம் பெறுகின்றன. சினிமாவில் நல்ல கருத்துக்களை தயாரிப்பாளர்களோ, டைரக்டர்கள்தான் செய்ய வேண்டும். 
முதலில் சினிமாவில் குத்துப்பாட்டை குறைக்கட்டும். அந்த சினிமா பாட்டுகள் இல்லை என்றால் மேடையில் அவர்கள் ஆட வேண்டிய அவசியம் இருக்காது. இதனைக் கேட்பதால் உங்கள் (செய்தியாளர்) மீது நடன கலைஞர்கள் கோபப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
