இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம்.. இதனை இந்தி வியாபாரி அண்ணாமலை புரிந்துக்கொள்ளனும்- அதிமுக
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை ஒழிய வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், அதிமுக இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.
![AIADMK has condemned Annamalai saying that we will oppose Hindi in any form in Tamil Nadu KAK AIADMK has condemned Annamalai saying that we will oppose Hindi in any form in Tamil Nadu KAK](https://static-ai.asianetnews.com/images/01hny401m24k81qeetsrbaxq6s/whatsapp-image-2024-02-06-at-7-58-53-am_363x203xt.jpg)
தமிழகத்தில் 5 மொழி கொள்கை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண், என மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை சென்று வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக வட மாவட்டமான வேலூர், திருவண்ணாமலை பகுதியில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அப்போது பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 70 ஆண்டு காலமாக தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் இருமொழி கொள்கை ஒழிய வேண்டும் , பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஐந்து மொழிக் கொள்கை வகுக்கப்படும் என பேசியிருந்தார்.அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராஜ் சத்யன், ஐபிஎஸ் படித்தவர் தமிழ்நாட்டின் வரலாற்றை படிக்காமல், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை "வியாபாரம்" என்று கொச்சைப்படுத்தியிருக்கிறார். இருமொழிக் கொள்கை என்பது ஏதோ தனிநபர் கொள்கையாக இங்கு திணிக்கப்படவில்லை. அது, பலரின் ரத்தமும் வியர்வையும் சிந்தி ஒரு மாநிலமே தன்னெழுச்சியாகத் திரண்டு தனக்கானத் தனிப்பெரும் கொள்கையாக செதுக்கியது. "உள்ளே தமிழ்- வெளி உலகிற்கு ஆங்கிலம்" என்ற அறிவுசார் இருமொழிக் கொள்கையால் தான் இன்று தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
இந்தி வியாபாரி அண்ணாமலை
இந்தியை முன்னிலைப்படுத்தும் இந்தியாவின் அலுவல்மொழி நெறிமுறைகள் 1976 தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தாது என்றபோதே எங்கள் இருமொழிக் கொள்கையின் வீரியம் என்னவென்பதை அண்ணாமலை போன்ற "இந்தி வியாபாரிகள்" தெரிந்துகொள்ள வேண்டும்! இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்க்கவல்ல ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! அதிமுக இந்தி திணிப்பை எதிர்க்கும் ! வெல்லும்! என ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்