AIADMK has been paid in RKNagar

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக, டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த முறை, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. 

100 கோடிக்கு மேலாக பணப்பட்டுவாடா நடத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதுவரை பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும், இதற்கு போலீசார் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார், இரண்டாவது இடத்தைப் பிடிப்பது யார் என்ற ரிப்போர்ட்டை, மத்திய - மாநில உளவுத் துறையினர் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுவரை கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டுகளில் திமுக முதலிடத்திலும், தினகரன் இரண்டாமிடத்திலும், ஆளுங்கட்சியினர் மூன்றாம் இடத்திலும் இருப்பதாக கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி இரவு மத்திய உளவு பிரிவும், 17 ஆம் தேதி காலையில் மாநில உளவு பிரிவும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. அந்த அறிக்கையின்படி, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முதலிடத்திலும், தினகரன் இரண்டாவது இடத்திலும் உள்ளதாகவு கூறப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாவது இடத்தில் பின் தங்கியுள்ளார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்.கே.நகரில், ஆளுங்கட்சியினர் ஒரே நாளில் அதாவது 6 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனைகளிலும், எம்ஜிஆர் சமாதியிலும் ஹோட்டல்களிலும் பணப்பட்டுவாடா செய்ததாக சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சியினர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மூன்று வழக்குகளும், தினகரன் ஆதரவாளர்கள் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பணப்பட்டுவாடா காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல், இடைத்தேர்தல் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது பணப்பட்டுவாடா ஜரூராக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் கூறி வருகின்றனர்.