அதிமுக தேர்தலில் தோற்கல.. இவங்கதான் தோத்துட்டாங்க.. கடுப்பான கடம்பூர் ராஜு !!
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான படுதோல்வி அடைந்தது.
கோவை உள்ளிட்ட எந்தவொரு மாநகராட்சியையும் அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. அதேபோல 138 நகராட்சிகளில் வெறும் மூன்றையும், 490 பேரூராட்சிகளில் 15ஐ மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. கடந்த ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக இதேபோல படுதோல்வியைச் சந்தித்து இருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 74-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு, செண்பகவல்லி அம்மன் கோயிலில் அன்னதானத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ அதிமுக மக்களை நம்பி தைரியமாக உள்ளாட்சி தேர்தலில் தனியாகபோட்டியிட்டது. ஆனால், திமுக முழு பலத்துடன், ஆட்சி அதிகாரத்தில் இருந்தும்கூட மிகப்பெரிய கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தல் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நடந்த தேர்தல் இது. இதில் ஆட்சியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் தோல்வியடைந்துள்ளனர்’ என்று கூறினார்.