அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி மனு! டிடிவி ஆதரவு எம்எல்ஏ உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
அதிமுக நடத்த உள்ளதாக அறிவித்துள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்கு தடை கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
அவைத் தலைவர் மசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் வரும் 12 ஆம் தேதி காலை 10.35 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏட்டிக்கு போட்டியாக தினகரன் கோஷ்டியும், எடப்பாடி கோஷ்டியும், மாறி மாறி கட்சி நிர்வாகிகளை பதவியில் இருந்து தூக்குவதும், அறிக்கைப்போர் நடத்துவதுமாக இவ்விரு அணிகளுக்கிடையே அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று பொது செயலாளரான சசிகலாவையும், துணை பொது செயலாளரான டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து முழுவதுமாக விலக்கி வைக்கப்போவதாக, இன்றைய எடப்பாடி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக, டிடிவி தினகரனோ பல அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கட்சி பதவிகளைப் பிடுங்கி, அதிரடி காட்டினார்.
அடுத்து டிடிவி தினகரன் என்ன செய்வார்? என்று தெரியாத நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்று பொதுக்குழுவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி தரப்பு தெரிவித்துள்ளது.
வரும் 12 ஆம் தேதி, ஜெயலலிதா வழக்கமாக நடத்தும் சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு நடைபெறும் என கட்சியின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் அறிவித்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட தடை கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்செய்துள்ளார்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு தடைக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நீதிமன்றத்துக்கு வரும் என தெரிகிறது.