அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், டெண்டர்களில் ஊழல் செய்துள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெறுகிறது. கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லம், சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், வடவள்ளியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரான சந்திரசேகர் என்பவரின் வீட்டிலும் காலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில், 3வது முறையாக வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.