நடிகைக்கு அமைச்சர் மணிகண்டன் அனுப்பிய மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் கொண்ட அவருடைய செல்போன் மதுரையில் அவருக்கு மட்டுமே தெரிந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும். அந்த செல்போனை கைப்பற்றினால் மட்டுமே இந்த விசாரணைக்கு  உறுதியாக இருக்கும் என்று காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

துணை நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் காவல்துறை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டன் ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மணிகண்டனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது புகார் அளித்த நடிகைக்கு அமைச்சர் மணிகண்டன் அனுப்பிய மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் கொண்ட அவருடைய செல்போன் மதுரையில் அவருக்கு மட்டுமே தெரிந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும். அந்த செல்போனை கைப்பற்றினால் மட்டுமே இந்த விசாரணைக்கு உறுதியாக இருக்கும் என்று காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்க முடியாது எனவும், ஜூலை 3, 4ம் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவரை துன்புறத்தக்கூடாது. உரிய உணவு வழங்க வேண்டும். அவரது வழக்கறிஞரை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என சில நிபந்தனைகளை போலீசாருக்கு நீதிமன்றம் விதித்துள்ளது.