அதிமுகவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு! எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பேனர்களை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பேனர் கலாச்சாரத்தை குறைக்கும் வகையில், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோரின் படங்கள் அரசு விளம்பரங்களில் மட்டுமே வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர்களில் இருக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் சில விதிகளை வகுத்திருந்தது. இந்த நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று 4 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அண்ணாசாலை, பசுமைவழிச்சாலை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய பகுதிகளில், ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை வரவேற்பதற்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், விதிமுறை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டார். அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
மேலும், சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி மனுவில் கூறியிருந்தார். ரிட் வழக்கில் இதுபோன்று கோரிக்கையை எழுப்ப முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.