புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து கொடுத்த அதிர்ச்சி... ஆளுநர் தமிழிசைக்கு பரபரப்பு கடிதம்...!
அதுமட்டுமின்றி புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரரான ராமலிங்கமும் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மத்திய உள்துறை அமித் ஷா காரைக்காலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பதவியை ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஷன் (திமுக), ஜான்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவி இணைந்தனர். அதுமட்டுமின்றி புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரரான ராமலிங்கமும் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது சகோதரர் ராமலிங்கம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததை அடுத்து, சபாநாயகர் சிவக்கொழுந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். 2016ம் ஆண்டு முதன் முறையாக காங்கிரஸ் சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்ற சிவக்கொழுந்து, 2019ம் ஆண்டு சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.