“கட்டுப்பட வைக்க நினைத்தால் அவ்வளவுதான்” – அமைச்சர்களை விளாசும் எம்.எல்.ஏ...
தினகரன் விவகாரத்தில் அமைச்சர்கள் எடுத்த முடிவுக்கு எல்லாம் கட்டுப்பட முடியாது எனவும் கட்டுப்பட வைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பெரம்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர், சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.
சிறைக்கு செல்லும் முன் எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி எடப்பாடியை முதல் நிலை வேட்பாளராகவும் தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்து விட்டு சென்றார்.
தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை விவகாரத்தில் ஒ.பி.எஸ் தரப்பு குடைச்சல் கொடுக்கவே சின்னம் முடங்கியது.
இதையடுத்து முடங்கிய சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றாக கூறி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், எடப்பாடி தலைமயிலான அமைச்சரவை ஒ.பி.எஸ்சுடன் கூட்டு சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க திட்டமிட்டது.
இதனிடையே தற்போது தினகரன் ஜாமில் வந்து கட்சியில் தொடர்ந்து செயலாற்றுவேன் எனவும் சசிகலாவுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் 17 பேர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
ஒன்றரை மணிநேர ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சருடன் 19 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கட்சி நலனுக்காகவும் ஆட்சி நலனுக்காகவும் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்தோம் எனவும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக ஒருமித்த கருத்துடன் உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் தினகரனை அதிமுகவினர் யாரும் சென்று பார்க்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல் கூறியதாவது:
தினகரன் விவகாரத்தில் அமைச்சர்கள் எடுத்த முடிவுக்கு எல்லாம் கட்டுப்பட முடியாது.
ஆட்சிக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
கட்டுப்பட வைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.