அதிமுக எம்எல்ஏவை தாக்கியவர் திடீர் மரணம்… என்ன காரணம் ?
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த வாரம் அதிமுக எம்எல்ஏ பன்னீர் செல்வத்தின்மீது தாக்குதல் நடத்திய பாமகவை சேர்ந்த வசந்தஅணி என்பவர் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார்.
கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம், கடந்த வாரம் போளூருரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார்.
அப்போது மேடை அலங்கார பணி செய்யும் பாமகவைச் சேர்ந்த வசந்தமணி என்பவர், எம்எல்ஏவின் காலில் விழுவது போன்று நடித்து அவரின் முகத்தில் கையால் குத்தியுள்ளார். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபரை போளூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
கலசப்பாக்கத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்துக்கு மேடை அலங்காரம் செய்த பணத்தை வசந்தமணிக்கு எம்எல்ஏ தரப்பில் தருவதில் தாமதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தமணி எம்எல்ஏ பன்னீர் செல்வம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த எம்எல்ஏ பன்னீர்செல்வம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடுதிரும்பினார். அதே நேரத்தில் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் வசந்தமணி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே கைது செய்யப்பட்ட வசந்தமணிக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வசந்தமணி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கான காரணம் எதுவும் சொல்லப்படாத நிலையில், வசந்தமணியின் மரணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.