ADMK Minister Giving trouble to Edapadi palanisami
ஜெயலலிதா என்ற வலுவான வழி நடத்தும் ஆளுமையை இழந்ததால், கேப்டன் இல்லாத கப்பலாக சென்று கொண்டிருக்கிறது, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. எப்போது கவிழும், எப்போது தரை தட்டும் என்று யாருக்கும் தெரியாது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக, கூவத்தூரில் சிறை பிடிக்கப்பட்ட எம்.எல்.ஏ க்களுக்கு, தினகரன் தரப்பில் இருந்து சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மேலும், டெண்டரில் கமிஷன் என்று பேசப்பட்டாலும், அரசிடம் நிதியே இல்லை என்று காரணம் காட்டி, பல மாவட்டங்களில் எந்த டெண்டரும் விடப்படவில்லை.
அதனால், அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ க்கள் பலர், ஜெயலலிதா இல்லாத இதுவே சரியான தருணம் என்று , ஆளாளுக்கு முதல்வர் எடப்பாடிக்கு இடையூறு கொடுத்து வருகின்றனர்.
தலித் எம்.எல்.ஏ க்கள், தனிக்கொடி பிடித்து ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் கேட்டு முதலில் நெருக்கடி கொடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்துவதற்கே முதல்வருக்கு போதும், போதும் என்றாகி விட்டது.
தற்போது, தோப்பு வெங்கடாச்சலம், கரூர் செந்தில் பாலாஜி கோஷ்டி வேறு, பத்து எம்.எல்.ஏ க்கள் ஆதரவுடன், தனி கூட்டம் நடத்தி முதல்வரை அச்சுறுத்தி வருகிறது.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரத்தை நிலைநாட்டுவதில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு மத்தியில் நீயா நானா? போட்டி நடந்து வருகிறது.
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், கருப்பண்ணனுக்கும் மோதல், தர்மபுரியில் அமைச்சர் அன்பழகனுக்கும், முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கும் மோதல், கரூரில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் செந்தில் பாலாஜிக்கு மோதல் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போதுள்ள நிலையில், கூவத்தூர் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமானால், 50 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். இப்போது அது சாத்தியம் இல்லை.
எனவே, குடியரசு தலைவர் தேர்தல் முடியும் வரை, அமைச்சரவையில் மாற்றம் இல்லை என்று அறிவித்து விட்டார் முதல்வர் எடப்பாடி.
அதன் பிறகு, ஆட்சி இருந்தால் பார்த்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தாரோ என்னவோ? இப்படி ஆளாளுக்கு குடைச்சல் கொடுத்தால், அவரால் என்ன செய்ய முடியும் என்கின்றனர் மூத்த அமைச்சர்கள்.
என்ன செய்வது, கொண்டவன் இல்லாத வீட்டில், கண்டவன் எல்லாம் அதிகாரம் செய்வான் என்று சொல்லி வைத்தது சும்மாவா?
