களத்தில் முந்தும் அ.தி.மு.க - மற்றோர் கருத்து கணிப்பு முடிவுகள்
சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 112 முதல் 120 தொகுதிகள் வரை பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என மக்கள் மையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 112 முதல் 120 தொகுதிகள் வரை பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என மக்கள் மையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. தேர்தலில் 32 சதவீதம் பேர் அ.தி.மு.கவிற்கும் 31 சதவீதம் பேர் தி.மு.கவிற்கும் வாக்களிக்கவுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் மையம் என்ற தன்னார்வ நிறுனத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை 36 சதவீத மக்களும் ஸ்டாலினை 34 சதவீத மக்களும் தேர்வு செய்துள்ளனர். கடந்த சட்ட மன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றியுள்ளதாக 51 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்றாக உள்ளதாக 43 சதவீதம் பேரும் மோசம் என்று 32 சதவீத மக்களும் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவு கடன் தள்ளுபடி, குடிமராமத்து திட்டம், தொடர் மின்சாரம் வழங்கியது, பொங்கல் பரிசு, அம்மா மினி கிளினிக்குகள், ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது, காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கிய திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக அரசின் சிறந்த செயல்பாடுகள் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க தலமையிலான கூட்டணி 112 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தி.மு.க கூட்டணி 80 முதல் 90 தொகுதிகள் வரையும் 24 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.ஜனநாயகத்தின் குரல் (Voice of Democracy) மற்றும் மக்கள் மையம் ஆகிய அமைப்புகள் தனித்தனியே நடத்திய கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது.