ADMK Carders Specials Welcomed Their Leader TTV Dinakaran
கட்சியின் பிளவால் முடக்கப்பட்ட இலையை மீட்க லஞ்ச கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டில் திஹார் சென்று ஜாமினில் திரும்பிய தினகரனுக்கு அதிமுக அம்மா அணி தொண்டர்கள் தடபுடலாக வரவேற்பளித்தனர்.
பிற்பகல் 2 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த தினககரனுக்கு, விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த ஏராளமான அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் புன்முறுவலுடன் கைகூப்பி ஏற்றுக்கொண்டார் தினகரன்.

அதனைத் தொடர்ந்து அவரது கார் அடையாரை நோக்கிச் சென்றது. வழி நெடுக ஏராளமான அதிமுகவினர் அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சாலையின் இரு பக்கங்களிலும் திரண்டு நின்று அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பி, வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுமார் 3 மணி அளவில் அடையாறில் உள்ள தனது இல்லத்தை வந்தடைந்தார்.

அங்கு அவரது வீடு முன்னர் திரண்டிருந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள், உற்சாக குரல் எழுப்பி, தாரை தப்பட்டை கிழிய கிழிய குத்து டான்ஸ் போட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர். தினகரனின் வீடு இருக்கும் அடையார் பகுதியே அதிமுக அம்மா அணியால் குலுங்கியது. தினகரனின் வாகனம் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தொண்டர்கள் மாலைகள் போட்டும், கை கொடுத்தும் அதகளப்படுத்தி விட்டனராம்.

கட்சியின் வெற்றி சின்னமாக கருதப்படும் இலைக்காக சிறைக்கு சென்று திரும்பும் தினகரன் மனம் சோர்ந்து விடக்கூடாது. அவர் சென்னை வந்ததும் எல்லா சோகத்தையும் மறந்து மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று வடசென்னை வெற்றிவேல் மற்றும் தென்சென்னை கலைராஜன் எல்லா வழியிலேயும் தொண்டர்களை குவித்து வைத்திருந்தனர்.
