ADMK carders anger against IT and BJP Govt

ஜெயலலிதாவின் பரம எதிரியான தி.மு.க. கூட இப்படியொரு அதிரடியை எதிர்பார்த்திருக்காது. ஆனாலும் அந்த சம்பவம் நிகழந்து கொண்டிருக்கிறது. ஆம் அகில இந்திய அ.தி.மு.க.வினர் கோயிலாகவும், அனைத்திய அரசியல்வாதிகள் ‘பெரும் அதிகார மையமாகவும் பார்த்து பிரமித்துக் கொண்டிருந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. 

போயஸ் வீடு ரெய்டில் சிக்குவது புதிதில்லைதான். ஏற்கனவே தி.மு.க. அதன் ஒவ்வொரு செங்கலையும் நகர்த்தி பார்த்து ஸ்கேன் செய்திருக்கிறது. ஆனால் அந்த ஜெயலலிதாவுக்கும், கடந்த 10 ஆண்டுகளில் விஸ்வரூபமெடுத்த ஜெயலலிதாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தான் கண் மூடும் முன் வெறும் பிராந்திய கட்சியான அ.தி.மு.க.வை தேசத்திலேயே 3வது பெரிய இயக்கமாக மாற்றிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

அப்பேர்ப்பட்ட ஜெயலலிதாவின், அதுவும் அமரர் ஆனவரின் வீட்டில், அதுவும் அரசுடமையாக்கப்படும் இல்லத்தில் இந்த ரெய்டு நடக்கிறது. 

ரெய்டு செய்யும் அதிகாரிகள் தரப்பில் “ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டு நாட்களுக்கு முன் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சில ஆவணங்களை சரி பார்க்கவும், சில தகவல்களை கிராஸ் செக் செய்யவும் வேண்டியிருக்கிறது. அதனால் நீதிமன்ற அனுமதி பெற்று, போலீஸுக்கு முதலிலேயே சொல்லி கூடுதல் பாதுகாப்பு பெற்றே இதை நடத்துகிறோம். பூங்குன்றனின் அறையில்தான் தேடலே.” என்கின்றனர். 

இந்த சோதனை இரவிலேயே முடிந்துவும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று சொல்லப்பட்ட நிலையில், இல்லையில்லை பூங்குன்றன் அறையையும் தாண்டி மொத்த பங்களாவிலும் சோதனை நடக்கும் போலிருக்கிறது!அம்மா பயன்படுத்திய அறையையும் விட்டு வைக்காமல் நோண்டி துருவி சோதனையிட இருக்கிறார்கள் என்று மெயின் சோர்ஸ் தகவல் சொல்கிறது என்று தங்களுக்குள் பரபரக்கின்றனர் முதல் நிலை அ.தி.மு.க. நிர்வாகிகள். 

சசி வகையறா ரெய்டை கண்டு ரசித்த அமைச்சர் பெருமக்கள், போயஸ் ரெய்டை ஜீரணிக்கமுடியாமல் தவிக்கின்றனர். எங்கே அடுத்து நம்மீதும் பாய்வார்களோ? என்கிற பயம் முக்கால்வாசி, என்ன இருந்தாலும் அம்மா வீடு, அதுவும் நாம் ஆளும் காலத்திலேயே சோதனைக்கு ஆளாவதா என்கிற வருத்தம் கால்வாசி. 

ஆனால் டெல்லியின் லாபிக்கெல்லாம் மிரளாத அ.தி.மு.க. நிர்வாகிகளோ இந்த ரெய்டை மிக முழுமையாக எதிர்க்கிறார்கள். எதைத்தான் இப்படி தேடி அலைகிறது ஐ.டி. துறை? யார் இருக்கும் தைரியத்தில் இப்படி பாய்கிறார்கள்? 

கொடநாடை தோண்டியாச்சு, போயஸினுள்ளும் நுழைஞ்சாச்சு, அடுத்து இனி அம்மாவின் கல்லறையையும் தோண்டுவார்களா? அம்மா உயிரோடு இருக்கையில் சென்னை இருக்கும் திசை நோக்கியமர்ந்து அரசியல் பேச தைரியமில்லாதவர்கள் இன்று அம்மாவின் வீட்டையே சோதனை நடத்த உத்தரவிடுமளவுக்கு ஆகிவிட்டார்கள். இதற்கெல்லாம் முழு காரணம், அவர்கள் முன் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து மண்டியிட்டு கிடக்கும் நம் கட்சி தனவான்களே! 
அம்மாவின் ஆன்மா இந்த அதிகப்பிரசங்கிகளையும், இந்த அடிமைகளையும் நிச்சயம் மன்னிக்காது...என்று பொங்கி எழுந்துள்ளனர்.