admk cadres letter to sasikala
ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம்?, நீங்கள் கொலை செய்தீர்களா?, அவருக்கு ஏன் துரோகம் செய்தீர்கள்? எனக் கேள்வி கேட்டு தொண்டர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கில் வரும் கடிதத்தில் சிறையில் இருக்கும் சசிகலா கடும் “அப்செட்” ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடிதங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து வந்துள்ளன, ஜெயலலிதாவின் மரணத்துக்கு விடை கிடைக்காமல், மனவேதனையில் இந்த கடிதம் இருக்கின்றன என்று பரப்பன அக்ரஹார சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பின், 26 நாட்களில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இது தொண்டர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கி தனியாக செயல்படத் தொடங்கினார்.
இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டுகள் சிறைதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ெஜயலலிதாவின் எப்படி இறந்தார்?, அவர் உடல்நிலை குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கொடுக்கப்பட்டது ஏன் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது.
அதைவெளிக்காட்டும் விதமாக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 100க்கணக்கில் கடிதங்கள் தமிழில் வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

“சசிகலா, மத்திய சிறைச்சாலை பரப்பன அக்ரஹாரம், பெங்களூரு 560100” என்ற முகவரிக்கு கடந்த பிப்ரவரி 15-ந்தேதிக்கு பின் நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வந்துள்ளன. அந்த கடிதத்தில், “ஜெயலலிதாவை சசிகலா திட்டமிட்டு கொலை செய்துவிட்டது போன்று குற்றம்சாட்டி எழுதப்பட்டுள்ளன.
ஜெயலலிதா திடீரென இறப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. இது திட்டமிட்ட படுகொலை” என்ற எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த கடிதங்கள் குறித்து சிறை வட்டாரங்கள் கூறுகையில், “ நீங்கள் எங்கள் தலைவியை, அன்பு அம்மாவை கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு இரக்கமற்ற, நம்பிக்கையற்ற பெண்.

உங்களுக்காக வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்த ஜெயலலிதாவுக்கு நீங்கள் துரோகம் இழைத்துவிட்டீர்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்களின் தீய எண்ணங்களால் இப்போது நீங்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் செய்த தவறுகளுக்காகவும், துரோகத்துக்காகவும், இனி இன்ஞ்,இன்ஞ்சாக துன்பத்தை அனுபவிப்பீர்கள்” என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து வந்துள்ள இந்த கடிதங்கள் பெரும்பாலும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலாவை குற்றம் சாட்டி எழுதப்பட்டுள்ளதே தவிர, அவருக்கு மிரட்டல் விடுத்து ஏதும் எழுதப்படவில்லை.

இந்தக் கடிதங்களை தொடக்கத்தில் படித்து வந்து சசிகலா, தொடர்ந்து இதுபோல் கடிதங்கள் எழுதப்பட்டு வந்ததால், மிகவும் வேதனை அடைந்து, அதை படிப்பதை நிறுத்திவிட்டார்.
அனைத்து கடிதங்களும் அவரைக் குற்றம்சாட்டி எழுதப்பட்டு வருவதால், சசிகலா மிகுந்த மனஉளைச்சலிலும், வேதனையிலும் இருப்பதாக என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சசிகலா பெயருக்கு சிறைக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும், அவருடன் இருக்கும் இளவரசி பிரித்துப்படித்து, இதுபோன்ற கடிதங்களை சசிகலாவிடம் கொடுப்பதை தவிர்த்து வருகிறாராம்.
