கனிமொழிக்கு ஜால்ரா அடித்த எம்.பி. நவநீத கிருஷ்ணன் அதிரடி நீக்கம்… பட்டாசு கிளப்பிய ஈபிஎஸ்-ஒபிஎஸ்!!
அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.பி. நவநீத கிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.பி. நவநீத கிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.பி. நவநீதகிருஷ்ணன் இன்று முதல் விடுவிக்கவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 27 ஆம் தேதி திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இல்லம் திருமணத்தில் கலந்து கொண்ட பேசிய அதிமுக எம்.பி. நவநீதி கிருஷ்ணன், மாநிலங்களவைக்குப் புதிதாக சென்ற போது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன்.
அப்போது டி.கே.ரங்கராஜன், கனிமொழி ஆகியோா் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனா். ஒரு முறை மத்திய அமைச்சருடன் எனது அனுபவமின்மை காரணமாக சண்டை போட வேண்டியிருந்தது. அப்போது சகோதரி கனிமொழி என்னை சமாதானப்படுத்தி அவரே மத்திய அமைச்சருடன் பேசினாா். நாங்கள் எடுத்துக் கூறிய விஷயம் தமிழகத்தைப் பொருத்தவரை பாதிக்கக் கூடிய விஷயம் எனவும் அமைச்சருக்குத் தெரிவித்தாா். மேலும், எனக்கும் ஒரு அறிவுரை கொடுத்து, நம்மூா் மாதிரி பேசக்கூடாது என்றும், எரிச்சலூட்டாமல் அழுத்தம் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். ஒரு போராட்டத்தின் போது தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி விடக் கூடாது என எனக்கு புரிய வைத்தாா் என கனிமொழியை பாராட்டிப் பேசினாா்.
முன்னதாக, நவநீத கிருஷ்ணன் பேச வருவதற்கு முன்பாக, அவரை திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி அழைத்தாா். அவா் பேசுகையில், இங்கே புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. இதைத் தான் நமது தலைவா்கள் விரும்பினா். இது அந்த காலகட்டத்தில் நடக்காமல், இப்போது முதல்வா் மு.க.ஸ்டாலினின் காலத்தில் நடந்திருக்கிறது என்றாா். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் அதிமுகவின் முக்கிய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.