மாநிலங்களவை தேர்தல்... அதிமுகவின் 2 இடங்களுக்கான வேட்பாளர்கள் யார்? அறிவித்தது அதிமுக தலைமை!!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவின் 2 இடங்களுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவின் 2 இடங்களுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷணன், விஜயகுமார் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதை அடுத்து காலியிடத்தை நிறுப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தைப் பொருத்து ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு 34 அல்லது 36 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் திமுகவுக்கு 3 எம்பி பதவிகள், அதிமுகவுக்கு இரு எம்பி பதவிகள் கிடைக்கும். 6 ஆவதாக உள்ள எம்பி பதவியை காங்கிரஸ் திமுகவிடம் கேட்டு பெறும் என கூறப்பட்டது. அதன்படி, ஒரு இடத்தை காங்கிரசுக்கு திமுக வழங்கியுள்ளது. இந்த ஒரு இடத்துக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுகவின் 2 இடங்களுக்கான வேட்பாளர்கள் யார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிடுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமாக 19.5.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை, கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ம்ற்றும் ராமநாதபுரம் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் தர்மர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.