தமிழகத்தில் மெகா கூட்டணி என அழைக்கப்பட்ட அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணி  பெரும் தோல்வியைத் தழுவியதையடுத்து அதிமுகவை கழற்றிவிட பாஜக திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்கவும் அக்கட்சி முடிவு செயதுள்ளது. 

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும், அமோக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக, மத்தியில், பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. ஆனால், தமிழகத்தில், படுதோல்வி அடைந்தது. அதன் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க., ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டும், தமிழகத்தில், பா.ஜ., தேறாமல் போனதற்கான காரணங்களை அதித்ஷா தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது, தமிழகத்தில், பாஜகவின் பலத்தை அதிகரிக்கவும், கிராம அளவில், கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சித் தேர்தலில், தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில், திமுக அணி, 53 சதவீத வாக்குகளையும், அதிமுக அணி 30 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. தனிப்பட்ட முறையில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 40 க்கும் மேல் இருந்த நிலையில் இந்தத் தேர்தலில் 18 சதவீதம் மட்டுமே பெற்றது.

இது தொடர்பாக பாஜக எடுத்துள்ள சர்வேயில் , அதிமுக அணி பெற்ற, 30 சதவீதம் வாக்குகளில், ஐந்து சதவீதம் மட்டுமே, அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. ஐந்து சதவீதம், கொங்கு மண்டலத்தில் கிடைத்த வாக்குகள். பாமக வாக்குகள் ஐந்து சதவீதம் போக, மீதமுள்ள,15 சதவீத வாக்குள் மத்திய அரசின் சாதனைகள், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாஜக போட்டியிட்ட, ஐந்து மக்களவைத் தொகுதிகளில், ராமநாதபுரம், கோவை ஆகிய தொகுதிகளில், குறைந்த வித்தியாசத்தில் தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிமுக வேட்பாளர்கள், மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளனர். 

எனவே, இந்த தோல்வி, பாஜகவுக்கு எதிரான அலை அல்ல… அதிமுகவுக்கு எதிரான அலையாகத் தான் அமைந்துள்ளது என்றும், அந்த அறிக்கையில் பிள்ளி விவரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வாக்கு வங்கியை முழுமையாக இழந்துள்ள, அதிமுகவை துாக்கி சுமக்க வேண்டிய அவசியம், பாஜகவுக்கு இல்லை என அமித்ஷாத் கருதுகிறார். மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து, உள்ளாட்சித் தேர்தலில், பாஜக தனித்து போட்டியிட்டால், அதிமுகவை விட, அதிக வாக்குள் பெற முடியும் என அக்கட்சி நம்புகிறது.
இதையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி உடைய வாப்புள்ளது என்றும் இந்த கூட்டணி, உள்ளாட்சித் தேர்தல் வரை நீடிக்குமா என்பதுத் கேள்விக்குரியதாக உள்ளது.