பாஜகவிற்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தனது உடல் நிலை பாதிப்பால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவருக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். 

குஷ்புவும் அரசியலும்

தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு மொழித்திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை குஷ்பு, அரசியலில் ஆர்வமாக இருந்த குஷ்பு அதிமுக, திமுக, காஙு்கிரஸ் என பல கட்சிகளில் பணியாற்றி விட்டு தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். குஷ்புவிற்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம் பொறுப்பும் குஷ்புவிற்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தநிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். தற்போது தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக பிரச்சாரத்தில் இருந்து சற்று விலகிக்கொள்வதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

Scroll to load tweet…

உடல்நிலை பாதிப்பு

இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து, எனக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் மிகவும் பாதிப்படைய செய்தது,. இதனை தொடர்ந்து பல்வேறு சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை. இதன்காரணமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு எனக்குக் கண்டிப்பாக அறிவுறுத்தியது, இருந்த போதும் அதனை புறக்கணித்து பாஜகவின் காரியகர்த்தாவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன். மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால் வலி மற்றும் வேதனை அதிகரித்துள்ளது. உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. 

பிரச்சாரம் செய்ய முடியவில்லை

நீண்ட தூர பயணங்கள் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, இவை இரண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமானவை. எனவே கனத்த இதயத்துடன், தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் நான் தீவிரமாக பங்கேற்பதற்கு ஒரு இடைநிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியவில்லை என்ற எண்ணம் ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

இருப்பினும், எனது சமூக வலைதளம் மூலம் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன் மற்றும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேன்.நமது பிரதமர் தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதையும், நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.என குஷ்பு தெரிவித்துள்ளார்