விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்... விஸ்வரூபம் எடுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜய் மோதல்..!
விஜய் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறுதானே என்று விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விஜய் அறிவித்தார். இதனையடுத்து அந்தக் கட்சியில் பொருளாளராக இருந்த அவருடைய அம்மா ஷோபா அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். நடிகர் விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் விவகாரம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் அரங்கிலும் பரபரபாகியுள்ள நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரன் இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “என் பிள்ளை நன்றாக வரணும்ங்கிறதுகாக அவரை கேட்காமலேயேதான் 1993இல் அவருக்கான ரசிகர் மன்றத்தை நான் தொடங்குனேன். இன்று அவர் உச்ச நட்சத்திரம் ஆகிட்டார். அதனால, அவரு என் பிள்ளை இல்லையா? இப்பவும் விஜயை ஒரு குழந்தையாத்தான் நினைக்கிறேன். அவருக்கு எது நல்லதோ அதை இப்போ செஞ்சிருக்கேன். நான் தொடங்கிய அரசியல் கட்சி அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் அவருக்கு நல்லது என நினைத்தே இதை செஞ்சிருக்கேன்.
இந்த அரசியல் கட்சியை விஜயிடம் கேட்காமத்தான் தொடங்குனேன். ஆனா, நான் செஞ்சது நல்லதுன்னு கொஞ்சநாள் கழிச்சு விஜய் புரிஞ்சுப்பார். தன்னோட ரசிகர்களை நான் தொடங்கிய கட்சியில் சேரவேண்டாம்ணு சொல்லிருக்கார். அப்பா நல்லதுதான் செஞ்சிருக்காருன்னு விஜய் புரிஞ்சுக்க கொஞ்சம் பொறுத்திருக்கலாம். இப்போது விஜய்கிட்ட நான் பேசுவது சரியா இருக்காது. கொஞ்ச நாள் கழிச்சு பேசுவேன். என்னோட கட்சியில் விஜயின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தினா சட்ட நடவடிக்கை எடுப்பேன் என சொல்லிருக்கார். அதுபோல் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறுதானே.” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.