நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக,அதிமுக என இரண்டு பெரிய கட்சிகளும் படுவேகமாக தயாராகி வருகின்றன. 21 மாநகராட்சிகள் உட்பட நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு பிப்ரவரியில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜனவரி 3ம் வாரத்தில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கூறியிருப்பதாவது, ‘நகர்ப்புற உள்ளாட்சிகளை வலுவாக்கும் முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது, மக்கள் நீதி மய்யத்தின் பிரதான இலட்சியங்களில் ஒன்று. இதன் அடிப்படையில் உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக மய்யமானது தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறது. மய்யத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, தங்களது ஜனநாயகக் கடமையினை செவ்வனே தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனர். 

கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த `ஏரியா சபை, வார்டு கமிட்டி' போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 

இந்தச் சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு, துணைத் தலைவர் திரு.A.G.மெளரியா, I.P.S., (Rtd.,) அவர்கள் தலைமையில் மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக் குழு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை அறிவிக்கிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள், மக்கள் நீதி மய்ய இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.