மகாபாரதத்தை இழிவுபடுத்திய கமல்ஹாசன்..!! ஜனவரி முதல் வாரத்தில் வருகிறது தீர்ப்பு..!!
தொலைக்காட்சி நேர்காணலில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு என் மனதில்பட்டதை தெரிவித்தேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை.
மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கினை தீர்ப்புக்காக ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது . தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு கடந்த 2017 மார்ச் 12-ம் தேதி நடைபெற்ற அந்நிகழ்வில் கமலஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும், இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பழவூரைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தொலைக்காட்சி நேர்காணலில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு என் மனதில்பட்டதை தெரிவித்தேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை. வள்ளியூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனில் என் மீது என்ன குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது, என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. எனவே, வள்ளியூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். என கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கமலஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி கருத்து சுதந்திரம் உள்ளது.
ஒருவர் தெரிவிக்கும் கருத்து பிடிக்காமல் போனால், அதற்கு மாற்றாக கருத்து தெரிவிக்கலாமே தவிர குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. என வாதிட்டார். அதற்கு புகார் அளித்த ஆதிநாதசுந்தரம் தரப்பில்," மகாபாரதம் இந்துக்களின் புனிதநூல் என்பது பலரும் அறிந்தது. அதனை நன்கு அறிந்தே, பொதுமக்கள் விரும்பும் தளத்தில் இருக்கும் கமலஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் தீர்ப்புக்காக ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.