ஆ.ராசாவின் ஆபாச பேச்சு... பதவி வெறியில் உளறும் திமுகவினர்... கடுமையாக எச்சரித்த ஓ.பன்னீர்செல்வம்!
தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரை கடுமையாக எச்சரிப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறப்பு பற்றி அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசமாகப் பேசியதும் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாகரிகமற்ற முறையில் தரக்குறைவாகப் பேசிய ஆ.ராசாவுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவி வெறியில் அவரது உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும் திமுகவும் தரம் தாழ்ந்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தரக்குறைவான சொற்களால் வசைபாடுவதால் பேசப்படுபவர் ஒருபோதும் குறைந்து போவதாய் அர்த்தமல்ல. மாறாக அது பேசுபவருடைய அறிவீனத்தையே பிரதிபலிக்கும். மக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் சபை நாகரிகத்துடனும், அரசியல் மாண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தனது சுய வாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு பேசவேண்டும். இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரை கடுமையாக எச்சரிக்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.