அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி … அதிரடி எடப்பாடி….
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, என்,ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ள நிலையில் இன்று புதிய நீதி கட்சியும் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அந்த கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தி,ல திமுக, அதிமுக என இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கத் தொடங்கின. திமுகவை முந்திக் கொண்டு அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் கூட்டணி என அறிவிப்பை வெளியிட்டது.இதே போல் திமுகவும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ந்து 10 தொகுதிகளை ஒதுக்கித் தந்தது.
அதே நேரத்தில் தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டன. ஸ்டாலின் , கனிமொழி உள்ளிட்டோர் இது தொடர்பாக தேமுதிகவுட்ன் பேசினர்.
ஆனால் அதிமுக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி தலைமையில் ஒரு குழு விஜயகாந்த்தை தொடர்ந்து சந்தித்து வந்தனர். மேலும் பாஜகவும் விஜயகாந்த்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.. இதையடுத்து நாளை தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில், பாமக - பாஜக கட்சிகள் உறுதியான நிலையில், இன்று புதிய நீதி கட்சியும் கூட்டணியில் தன்னை இணைந்துள்ளது.
புதிய நீதி கட்சி கடந்த 2014 மக்களவைத் தேர்தலில்கூட பாஜக கூட்டணியில் இடம் பெற்றது அதனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளதால், இப்போதும் இதே கூட்டணியில் புதிய நீதி கட்சி இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, அதிமுக தலைமையகத்தில் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஏசி சண்முகம் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பிலும் கூட்டணி தொடர்பான உடன்பாடு கையெழுத்தானது. சண்முகத்துக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.