ஜெ பிறந்த நாளையொட்டி 500 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு …. மறைந்தும் மக்கள் பணியில் ஜெயலலிதா !!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதிலும் 500 டாஸ்மாக் கடைகளை மூ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்தார். அவர் முதலைமைசசராக பதவியேற்றதும் நூற்றுக்கும் அமற்பட்ட மதுக்கடைகளை மூட தனது முதல் கையெழுத்தைப் போட்டார்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைந்ததும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் 3000 டாஸ்மாக்கடைகள் மூடப்பட்டன. ஆனாலும் வெவ்வேறு இடங்களில் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து விட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 5000 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக அரசு பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.