திக்…திக்.. 10.30. மணி.. உலகையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு !
உலக நாடுகளுக்கு இந்தியாவை மிகப்பெரிய ஊழல் நாடாக அடையாளப்படுத்திய இந்த 2 ஜி ஸ்பெட்ரம் முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சரியாக இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு வழங்குகிறார்.
திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது அரசின் விதிமுறைகளுக்கு மாறாக குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார் என்றும் அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.
இதனால், அரசிற்கு சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை அளித்தது. இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கன்மொழி உள்ளிட்ட 11 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த ஊழலை மையம் வைத்து கடந்த 7 ஆண்டுகளாக அரசியல் நடந்து வருகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டால் தமிழ்நாட்டில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்தது. இதுவரையில் இந்த பாதிப்பிலிருந்து இவ்விரு கட்சிகளும் மீளவே இல்லை.
சுமார் 6 ஆண்டுகளாக நடந்த 2ஜி வழக்கு விசாரணையில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தநிலையில், தீர்ப்பு வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போனது.
இந்நிலையில், 2ஜி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.