"தினகரனுக்கு 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு; ஆனால் ஆட்சி கவிழாதாம்..!!!" - சொல்கிறார் வி.பி.கலைராஜன்
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகும் ஆனால் அதிமுகவின் ஆட்சி கவிழாது எனவும் அதிமுக அம்மா அணியின் கலைராஜன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று நேற்று முன்தினம் வெளியே வந்தார்.
அப்போது கட்சி பணிகளில் மீண்டும் பணியாற்றுவேன் என தெரிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது.
ஏற்கனவே டிடிவி அறிவித்தபடி கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
பின்னர், சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அதிமுகவில் இருந்து என்னை விலக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் இன்னும் 6 மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு என் பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று திடீரென அதிமுகவை சேர்ந்த 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் கலக்கமடைந்த எடப்பாடி 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர், எம்.எல்.ஏ கலைராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தினகரனை சந்தித்த எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரின் ஆலோசனையிலும் பங்கேற்பார்கள் எனவும், ஆட்சி கவிழாது எனவும் தெரிவித்தார்.
29 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாகவும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒதுங்கியிருக்க முடிவு செய்ய ஜெயக்குமார் பொதுச்செயலாளர் அல்ல எனவும், தினகரனை ஒதுக்கி வைக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்தார்.