பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் 26 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை....
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 339 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
விவசாயிகள் தற்கொலை
மஹாராஷ்டிராய மாநிலத்தில் பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதை ஆகிவிட்டது. இந்த தற்கொலைகளை தடுக்க ஆளும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் சென்று முடிந்து வருகிறது. இது தொடர்பாக சட்டசபை, மேல் சபை கூட்டங்களில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தும் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை.
கூட்டத்தொடர்
தற்போது சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை எழுப்பி பேசினார்.
இதற்கு பதில் அளித்து வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “
26 ஆயிரம்
2001–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மாநிலத்தில் மொத்தம் 26 ஆயிரத்து 339 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 12 ஆயிரத்து 805 விவசாயிகள் தங்கள் நிலம் மலட்டுத்தன்மை அடைந்ததாலும், கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமலும், கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு காரணமாகவும் தற்கொலை செய்துள்ளனர்.
580 விவசாயிகள்
இந்த ஆண்டு ஜனவரி 1–ம் தேதி முதல் ஆகஸ்ட் 15–ந் தேதி வரை மரத்வாடா மண்டலத்தில் மட்டும் 580 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதில் பீட் மாவட்டத்தில் அதிக பட்சமாக 115 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.