ஒரு ரெம்டெசிவர் மருந்து 25 ஆயிரம் ரூபாய்.. கள்ளச் சந்தை கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்.. 5 பேர் கைது..
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கேஎம்சி மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கேஎம்சி மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒரு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியரை தேடி வருகின்றனர். சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன் இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்த போது பலமுறை வரிசையில் நின்று போலி ஆவணங்கள் மூலம் மருந்துகளை வாங்கி உள்ளார்.
பின்னர் அறுவை சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மற்றொரு தற்காலிக ஊழியரான மணி என்பவருடன் சேர்ந்து முகமது கலீல் என்பவரிடம் ஒரு குப்பி 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். முகமது கலீல், முகமது ஜாவித் மற்றும் திருவல்லிக்கேணியில் மருந்து கடை வைத்துள்ள இர்பான் என்பவரிடமும் இவர் மூலம் ஆரிஃப் என்பவரிடம் கை மாற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனையை தடை செய்வதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி சமூகவலைதளத்தில் நோயாளிக்கு ஒருவருக்கு ரெம்டெசிவர் மருந்து தேவை என விளம்பரம் செய்து அதற்கு யாரெல்லாம் பதிலளிக்கிறார்கள் என கவனித்து விசாரணையை தொடங்கினர்.
அதன்படி ஆரிப் தன்னிடம் 25,000 ரூபாய்க்கு ரெம்டெசிவர் மருந்து இருப்பதாக கூறி விற்பனை செய்ய கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார் அப்பொழுது போலீசார் மடக்கி பிடித்து ஆரிப் கொடுத்த தகவலின் பேரில் மீதம் உள்ள 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த மருந்தை வாங்க முடியாது என்பதால் பாலகிருஷ்ணன் எவ்வாறு இந்த மருந்துகளை வாங்கினார் மருத்துவர்கள் யாரேனும் இதற்கு துணை போனார்களா என்ற அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.