சென்னையிலும் இந்த வருஷம் ஜல்லிக்கட்டு வப்பம்ல !! ஜனவரியில் கிழக்கு கடற்கரைசாலையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விழா !!!
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஜனவரி மாதத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வலியுறுத்தி சென்னை உட்பட தமிழகம் முழுதும் நடைபெற்ற போராட்டங்கள் உலகப்புகழ்பெற்றவை.
இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி "இளைஞர்கள் புரட்சி எனும் சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன.
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எந்த கட்சிகளின் தலையீடும் இல்லாமல் குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பிற்கும் எதிராகவும் பெரும் போராட்டம் வெடித்தது.
சமூக இணையதளங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர். அலங்காநல்லூர் சென்னை மெரினா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம் , கோவை வ. உ. சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், திருநெல்வேலி வ.உ.சி மைதானம், வேலூர் புதுச்சேரி ஆகியன முக்கியப் போராட்டக் களங்களாக அமைந்தன.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் இந்த எழுச்சிப் போராட்டத்தால் மிரண்டு போன மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிறப்பு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்தன. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்றன.
இந்நிலையில் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் சென்னை, கோவை போன்ற நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை' மற்றும், 'சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு இணைந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உள்ளன.
2018 ஜனவரி மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நடைபெறவுள்ள உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நாய்ஸ் அண்டு கிரெய்ன்ஸ்' நிறுவனம் ஒருங்கிணைப்பு செய்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட காளைகளும், நுாற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதை, ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் வகையில், தேவையான வசதிகளுடன் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
தென் மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வரும் ஜனவரியில் சென்னை மற்றும் கோவையிலும் நடைபெறவுள்ளது பொது மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.