வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்... முதல்வர் அதிரடி சரவெடி அறிவிப்பு..!
அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணங்கள் ஏதுமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
டெல்லியில் வாடகைக்கு குடியிருப்போருக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில், 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். சமீபத்தில் டெல்லி அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணங்கள் ஏதுமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, டெல்லியில் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என கடந்த ஆகஸ்ட் 1-ம் முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். ஆனால், வாடகை வீட்டில் இருப்பவர்கள் டெல்லி அரசின் அந்த மின்சார மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் 200 யூனிட் வரை இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் “முக்யமந்திரி கிரெய்தார் பில்ஜி மீட்டர் யோஜனா” திட்டத்தின் கீழ் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் மானியம் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
200 யூனிட்டுகளுக்கு மேல் 1 யூனிட் அதிகம் பயன்படுத்தினாலும் மொத்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதற்காக வாடகைக்கு குடியிருப்போர் ரூ.3000 முன்பணம் செலுத்தி மீட்டர்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மீட்டரைப் பெறுவதற்கு வாடகை வீட்டில் இருப்பதற்கான ஒப்பந்தத்தின் நகலை ஒப்படைத்தால் போதுமானது என்று அறிவித்துள்ளார். மேலும், வீட்டு உரிமையாளரிடம் இருந்து அனுமதி சான்றிதழ் எதுவும் தேவையில்லை. இந்த இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பாக டெல்லி அரசுக்கு ஆண்டு தோறும் ரூ1800-2000 கோடி இழப்பு ஏற்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.