கடந்த ஆறரை ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு ரூபாய் 19 லட்சம் கோடியை கலால் வரியின் மூலம் கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 19 நாட்களாக கடும் குளிரையும், கொரோனா தொற்றுப் பரவலையும் பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி தயாராக இல்லை. ஆனால், குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற பிரதமர் மோடி, அங்கே விவசாயிகளை சந்தித்து உரையாட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தலைநகருக்கு அருகில் போராடுகிற ஆயிரக்கணக்கான விவசாயிகளை சந்தித்து பேச மனமில்லாத பிரதமர் மோடி, குஜராத்திற்கு விமானத்தின் மூலம் சென்று கட்ச் பகுதி விவசாயிகளை சந்திப்பதை விட இரட்டை வேடம் வேறு எதுவும் இருக்க முடியாது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் விரோத அரசு என்று கூறுவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. கடந்த ஆறரை ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசு, தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா கொடுமையின் காரணமாக மக்கள் வருமானத்தை இழந்து, வாங்கும் சக்தியை இழந்து, வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ரூபாய் 50, தொடர்ந்து டிசம்பர் 15 ஆம் தேதி ரூபாய் 50 என ஒரே மாதத்தில் ரூபாய் 100 விலை ஏற்றப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 610 இல் இருந்து ரூபாய் 710 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய கொடுமையான விலையேற்றத்தை ஒரே மாதத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.
கடந்த மே மாதம் முதற்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தாமல் பா.ஜ.க. அரசு தவிர்த்து வருகிறது. மானியத்தையும் பறித்துக் கொண்டு, கலால் வரியையும் உயர்த்துகிற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதில்லை. மே 2014 இல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது. ஆனால், பெட்ரோல் விலை ரூபாய் 76.10 ஆகவும், டீசல் விலை ரூபாய் 52.54 ஆகவும் இருந்தது. பெட்ரோல் விலையில் கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், டீசலில் ரூபாய் 3.56 ஆகவும், மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டது. அந்த சுமையை மக்கள் மீது சுமத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த விலையேற்றத்தை சரிகட்ட மத்திய காங்கிரஸ் அரசு ரூபாய் 2 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு மானியங்களை வழங்கியது.