14 நாட்கள் பொதுமுடக்கம்... வலியுறுத்தும் சீமான்..!
தமிழகத்திலும் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு பொதுமுடக்கம் செய்ய வேண்டும்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சமாக பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு இன்று 2 லட்சத்தை எட்டியது. கொரோனா மரணங்களும் ஆயிரத்தை கடந்து விட்டன. இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவிவரும் சூழலில், பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை கையெலுத்துள்ளன. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிவருகிறாது. இதனையடுத்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளருடன் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. இதனிடையே தமிழகத்திலும் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு பொதுமுடக்கம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்’’எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.