தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு கண்டிப்பாக உண்டு... அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி..!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக தொடர்ச்சியாக 3-வது நாளாகப் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினோம்.
ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனையில் பிளஸ் டூ பொதுத்தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றே பெரும்பாலோனர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி அறிவிப்போம். பிளஸ் டூ வகுப்புப் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாமே தவிர, ரத்து செய்யப்படும் என்று சொல்ல விரும்பவில்லை. எனவே, மாணவர்கள் பெற்றோர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.
பிளஸ் டூ பொதுத்தேர்வுத் தேதி அறிவிக்கும் முன்பு உளவியல் ஆலோசனை, தேர்வுக்குத் தயாராகப் போதிய இடைவெளி வழங்கப்படு. மேலும் உரிய காலம் ஒதுக்கி, தெளிவான முறையில் அறிவிப்பை வெளியிடுவோம். மேலும் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே, தொற்றுப் பரவல் குறைவது பற்றி சுகாதாரத் துறை எப்போது தெரிவிக்கும் என்பதை எதிர்நோக்கி வருகிறோம். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படும்.” என்று மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.