World Wildlife day 2022: நமது புவினுடைய தாவரவியல் மற்றும் விலங்கியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ஆம் தேதி உலக வனவிலங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நமது புவினுடைய தாவரவியல் மற்றும் விலங்கியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ஆம் தேதி உலக வனவிலங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
எப்போதில் இருந்து அனுசரிக்கப்படுகிறது:

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அன்று நடைபெற்ற, ஐ.நா. அமைப்பின் பொதுச்சபை கூட்டம் மூலம் மார்ச் 3ஆம் தேதியை உலக வனவிலங்கு தினமாக அனுசரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அழியும் நிலையில் உள்ள வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. வனவிலங்கு தொடர்பாக சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தினங்களில் இது மிக முக்கியமான நாள் ஆகும்.

ஆபத்து பட்டியலில் உள்ள வனவிலங்கு உயிரினங்கள்:
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உயிர் வாழ்வை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், ஒரு மில்லியன் உயிரினங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. சுமார் 8,000 வகைகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐ.நா. அமைப்பு கடைப்பிடிக்கும் வறுமை ஒழிப்பு, நில வளங்களை பாதுகாப்பது மற்றும் நீடித்த வகையில் பயன்படுத்திக் கொள்வது போன்ற முயற்சிகளைப் போலவே, அழிவின் விழிம்பில் உள்ள உயிரினங்களை காப்பதற்கும் இந்த அமைப்பு உறுதி பூண்டுள்ளது.

உலக வனவிலங்கு தினத்தின் நோக்கம்:
உயிர் சூழலியலுக்கு மிகவும் இன்றியமையாத உயிரினங்களாக இருப்பவற்றை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்பதே உலக வனவிலங்கு தினத்தின் பிரதான நோக்கம் ஆகும்.

இன்றைய நவீன உலகில், மனிதர்கள் தங்களின் சுயத்திற்காக புலிகளின் தோலை உடையாகவும், இறைச்சியாகவும், மான்களை வேட்டையாடுவதும், யானைகளை கொன்று குவிப்பதும் இயற்கையான ஒன்றாகி விட்டது.

மேலும், இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தை அனுசரிக்கும்போது, அதிக ஆபத்தில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமாக வனவிலங்கு மற்றும் தாவரங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலியலை மேம்படுத்தவும், மனிதர்களின் நீடித்த தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையில், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றை அழியாமல் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
