the correct cycle is the occurrence of menstruation once a in month

மாதவிடாய் சுழற்சி முறை

மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுவதே சரியான சுழற்சி. இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளியில் தோன்றாமல் மாதம் ஒரு முறை தோன்றுவதற்கு முக்கியமான காரணம் உண்டு. பெண் பல ஆண்டுகள் கழித்து கருக்கொள்ள, பூப்பெய்தியதில் இருந்தே மாதம் ஒரு கரு முட்டை வெளியீடு நடக்க வேண்டும் என்பது இயற்கை. 

இத்தகைய பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சினை இருக்காது. மாதவிடாய் ஏற்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண்ணின் உடல் தயாராவது மார்பக வளர்ச்சி மூலம் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். இந்த நேரத்தில்தான் பெற்றோர் மாதவிடாய் குறித்து விளக்க வேண்டும். இத்தகைய மாறுதல்கள் இயல்பாகவே குறித்த காலத்தில் ஏற்படாவிட்டால், கால தாமதம் செய்யாமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். 

முதல் முறை மாதவிடாய் ஏற்பட்ட பின், இரண்டாவது சுழற்சி தள்ளிப் போகலாம். இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 21 நாளில் இருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் பூப்பெய்தும் காலம் 13 வயதிலிருந்து 14 வயது வரை இருக்கலாம். 

இயல்பான மாதவிடாய் சுழற்சி ஏற்பட சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். உடல்பருமன் ஏற்படாமல் இருக்க ஓடியாடி விளையாட வேண்டும். அன்றாட உடற்பயிற்சி மிக அவசியம். சிலருக்கு உடல் பருமனால் முதல் மாதவிடாய் முன்கூட்டியே வந்துவிடும். சிலருக்குக் கால தாமதம் ஆகும் நிலையும் உண்டு. 

ஒல்லிக்குச்சியாக, அதாவது `ஜீரோ சைஸ்` இருக்க விருப்பமுள்ளவர்கள் உணவை அறவே தவிர்ப்பார்கள். இது தவறானது. உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றை உட்கொண்டு ஒல்லியான உடல்வாகு என்றால் பிரச்சினை இல்லை. இவை அனைத்தும் இருந்தால், பூப்பெய்த 17 வயதுவரைகூடக் காத்திருக்கலாம். அதிகமான ஊட்டச்சத்து முன்கூட்டி பூப்பெய்த செய்துவிடும். 

அதேபோல ஊட்டச்சத்து குறைந்தால் கால தாமதமாகும். இதைத் தவிர்க்க சத்தான உணவில் புரதச் சத்து, இரும்புச் சத்து மற்றும் கால்சியம் ஆகியவை இருக்க வேண்டும். புரதச் சத்து என்றால் முளைவிட்ட பயிறு, மாமிசத்தில் ஈரல், மீன், முட்டை, உலர் கொட்டைகள் முக்கியமாக வேர்க்கடலை. 

இரும்பு சத்து என்றால் முருங்கை கீரை, வெல்லம், பேரீச்சம் பழம், ஈரல், முட்டையின் கரு, பிஸ்தா, காய்ந்த திராட்சை. கால்சியத்திற்கு பால், சீதாப்பழம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் மாதவிடாய் ஏற்பட்டு வந்தால் பின்னாளில் கருத்தரித்தல் பிரச்சினை வராது.