இந்த உலகிற்கே பல சாஸ்திரங்களை கற்றுக் கொடுத்து இன்றளவும் இந்த பூமி பூமிப்பந்தில் மிகவும் தொன்மையான குடிகளில் ஒன்றாக விளங்கி வருவதுதான் நமது தமிழ் குடி. இதைத்தான் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்பார்கள்.

பண்டைய தமிழர்கள் செய்த எல்லா விஷயத்திலும் ஏதோ ஒரு கருத்து அடங்கியிருந்தது. அது மங்கள நிகழ்வோ அல்லது துக்க நிகழ்வோ, அதில் அனுசரிக்கப்படும் பல சடங்குகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும், பெரிய உட்பொருளை கொண்டதாக இருக்கும் என்று இன்றளவும் நம்பப்பட்டு வருகின்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் தமிழகத்தின் திருநெல்வேலி ஜில்லா பகுதியில் இன்றளவும் இறப்பு ஏற்பட்ட ஒரு வீட்டில் நடக்கும் ஒரு சடங்கு குறித்து இந்த பதிவில் காணலாம். ஒரு முப்பது வயது இளைஞன் மாண்டு போகிறார், அவருடைய வீட்டில் அவருடைய உடல் கடத்தப்பட்டுள்ளது. அருகே அவருடைய 27 வயது மனைவியும், மூன்று வயது குழந்தையும் உள்ளார்கள். 

துளசிக்கு அருகில் இந்த 5 பொருட்களை ஒருபோதும் வைக்காதீங்க..அது பாவம்..வீட்டில் வறுமை சூழும்..!!

அந்த சடலத்தை சுற்றி பெண்கள் பலர் கூடிய அழுது கொண்டிருக்க, வெளியே ஆண்கள் அமர்ந்திருக்க, அந்த வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வருகிறார். அதை சபையின் நடுவே வைத்து அவர் கையில் இருந்த உதிரி முல்லைப் பூக்களை ஒவ்வொன்றாக அந்த பாத்திரத்தில் போடத் துவங்குகிறார். 

ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முல்லைப் பூக்களை அவர் அந்த பாத்திரத்தில் போட, அதை கண்டு அருகில் இருந்த அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்து, அந்த இளம் பெண்ணுக்காக பெரிய அளவில் வருத்தப்பட்டு, பின் ஆகா வேண்டிய காரியங்களை செய்ய செல்கின்றனர், அந்த மூதாட்டியும் அந்த பாத்திரத்தை எடுத்து சென்று விடுகிறார். 

சரி இது என்ன வினோத சடங்கு என்று பார்த்தால் இறந்த அந்த 30 வயது வாலிபரின் 27 வயது மனைவி, இப்பொது மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதை ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் ஒரு சடங்கு தான் இது. காரணம், இன்னும் சில மாதங்களில் அந்த இளம் பெண் பிள்ளையை பெற்றெடுக்கும் பொழுது ஊரார் அவரை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக அது செய்யப்படுகிறது.

கணவனை இழந்த ஒரு இளம் பெண், அவர் வாழ்க்கையை மேற்கொண்டு நல்ல முறையில் நடத்த இது பெரிய அளவில் உதவும். 

அறிவுள்ளவன் 'இந்த' தவறை ஒருபோதும் செய்யமாட்டான்! சாணக்கியர் சொல்லும் அந்த தவறு என்ன தெரியுமா?