அன்று வெங்காயத்தால் கடனாளி; இன்று வெங்காயத்தால் கோடீஸ்வரர் ....
வெங்காயம் பயிர் செய்து ஒரு நேரத்தில் கடன்காரராக மாறிய விவசாயி, இப்போது அதே வெங்காயத்தால் கோடீஸ்வரராகிவிட்டார்.
கர்நாடகாவின் சித்ராதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மல்லிகார்ஜுன (42). வெங்காயம் பயிரிட்டு கடனாகி வாழ்க்கையை கஷ்டத்தோடு நடத்தி வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வெங்காயம் பயிரிட்டார். சமீபத்தில் மல்லிகார்ஜுன 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார்.
ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூ.200-க்கு விற்கிறது. அதன்படி 240 டன் வெங்காயத்தின் மதிப்பு ரூ.4.80 கோடியாகும். மொத்த சந்தையில் அவர் விற்றிருந்தால்கூட ரூ.4 கோடி கிடைக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி மல்லிகார்ஜுன கூறியதாவது:எனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வெங்காயத்தை பயிரிட்டேன். தற்போது வெங்காய விலை அதிகரித்திருப்பதால் எனக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.
ஒரு காலத்தில் கடனாளியாக இருந்தேன். இப்போது கோடீஸ்வரனாகிவிட்டேன். அனைத்து கடன்களையும் அடைத்துவிட்டேன். புதிதாக வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன். கூடுதலாக நிலம் வாங்கவும் முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.