திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பயிற்சி முடிந்து உதவி ஆய்வாளராக பணி தொடங்கினார். இவருடைய நேர்மையே.. இவருக்கு எதிரியாக மாறியது. இதன் காரணமாக எங்கு சென்றாலும் நேர்மையாக இருக்க முடியாத அளவுக்கு பல்வேறு நெருக்கடிகள் சந்தித்ததால் தொடர்ச்சியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

நான் கூலி வேலைக்கே போறேன்..! நேர்மையாக இருக்க விடாததால் கதறும் உதவி காவல் ஆய்வாளர்..! பதிவை பாருங்க...

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவல் துறையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மிகவும் விரக்தியுடன் போலீஸ் வேலையை விட்டுவிட்டு கூலி வேலை செய்ய தயார் என அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பயிற்சி முடிந்து உதவி ஆய்வாளராக பணி தொடங்கினார். இவருடைய நேர்மையே.. இவருக்கு எதிரியாக மாறியது. இதன் காரணமாக எங்கு சென்றாலும் நேர்மையாக இருக்க முடியாத அளவுக்கு பல்வேறு நெருக்கடிகள் சந்தித்ததால் தொடர்ச்சியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் எட்டு முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சமீபத்தில்கூட ஆயுதப் படையில் இருந்து தூத்துக்குடி தருவைகுளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் ராஜ்குமார். இந்த ஒரு நிலையில் சென்னை ஆயுதப் படையில் பணியாற்றிய விவரம் குறித்து ஆவணங்கள் சமர்ப்பிக்கபடாததால் ராஜ்குமாருக்கு எஸ்பிஐ மெமோ கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவருக்கு கடந்த ஜனவரி மாத சம்பளமும் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ராஜ்குமார் 15 நாள் விடுப்பில் வீடு திரும்பியுள்ளார். ஆவணங்கள் சமர்பிக்காததற்கு காரணம் அமைச்சுப்பணியாளர்கள் லஞ்சப் பணத்தை எதிர்பார்த்து கோப்புகளை அனுப்பாமல் இருப்பதாகவும், தன் மனைவியின் மருத்துவ செலவு வங்கிக்கடன் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

எனவே இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வில்லை என்றால், கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ராஜ்குமார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியை கூட நம் இஷ்டப்படி வைத்து கொள்ளமுடியாத பணி,

சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ள இயலாத பணி,

பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ நமது மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி,

காலவரையற்ற பணி,
வாராந்திர ஓய்வில்லா பணி,
அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி,

இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம் தோறும் அறிக்கை அனுப்பபடும் ஒரே பணி,

அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைகூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி,

அமைச்சு பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி,

மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லகூட முடியாத படி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி,

இதுபோன்ற மன அழுத்தத்தின் காரணமாக செய்யும் தவறுகளினால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வெறுப்பை சம்பாதிக்கும் பணி,

இவற்றையெல்லாம் கேட்பதற்கு சங்கங்கள் அமைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரே பணி ,

நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டுகள் ஆகியும் சுதந்திரம் கிடைக்காத ஒரே பணி-
சீறுடை பணியாளர் எனும் காவல் பணி.

இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் "கட்டுப்பாடான துறை"

ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தாதா?

இப்படிக்கு:

விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்...

இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி. அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்"