காதுக்குள் எறும்பு அல்லது சின்ன வண்டு போன்ற ஏதேனும் பூச்சிகள் நுழைந்து விட்டால் சில வழிகளை பின்பற்றினால் அதை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காதில் எறும்பு அல்லது வண்டு போன்ற சின்ன பூச்சிகள் நுழைந்த அவதியை நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். காதுக்கு நுழைந்த எறும்பு குடைச்சல் கொடுக்கும். இதனால் நம்மால் இயல்பாகவே இருக்க முடியாது. அதுவும் குறிப்பாக, இரவு தூங்கும் போது எறும்பு வண்டு போன்ற சின்ன சின்ன பூச்சிகள் காதுக்குள் நுழைந்து தூக்கத்தை கெடுத்து நம்மை தொந்தரவு செய்யும். அப்படி உங்களது காதில் எறும்பு அல்லது வேறு ஏதேனும் சின்ன பூச்சிகள் நுழைந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளை பின்பற்றினால் போதும். அதை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காதுக்குள் எறும்பு நுழைந்தால் என்ன செய்ய வேண்டும்?
1. காதுக்குள் எறும்பு, பூச்சிகள் போனால் முதலில் ஒரு இருட்டான அறைக்குள் சென்று காதில் லைட்டை காட்ட வேண்டும். ஒளியானது பூச்சிகளை கவரும் என்பதால் அவை உடனே காதிலிருந்து வெளியே வந்துவிடும்.
2.மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சிறிதளவு உப்பு கலந்து, 2-3 சொட்டு காதில் ஊற்ற வேண்டும். உப்பு கலந்து நீரானது எறும்பு, பூச்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் அது உடனே வெளியே வந்து விடும்.
3. உங்களது வீட்டில் ஆலிவ் எண்ணெய் அல்லது பேபி ஆயில் இருந்தால் அதன் சில துளிகளை காதுக்குள் விட்டால் பூச்சிகள், எறும்புகள் காதுக்குள் இருக்க முடியாமல் வெளியே வந்துவிடும்.
செய்யக்கூடாதவை!
- காதுக்குள் எறும்பு பூச்சிகள் சென்றால் விரலை விடவேண்டாம். இதனால் காது வலி தான் ஏற்படுமே தவிர, எறும்பு வெளியே வராது.
- கார் சாவி, பட்ஸ், ஊக்கு போன்ற எந்த பொருட்களின் வைத்து காதுக்குள் போன பூச்சிகளை வெளியே எடுக்க ஒருபோதும் முயற்சி செய்ய வேண்டாம். இப்படி நீங்கள் செய்தால் காதுக்குள் நுழைந்த பூச்சி மேலும் உள்ளே செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி காது ஜவ்வும் சேதமடையும்.
- சிலர் காதுக்குள் எறும்பு, பூச்சி சென்றால் தீக்குச்சியின் மருந்தில்லா பகுதியை காதினுள் நுழைத்து வெளியே எடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் இப்படி செய்தால் காதின் உட்புறத்தில் உள்ள மென்மையான பகுதி பாதிப்படையும்.
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
காதுக்குள் தண்ணீர், எண்ணெய் ஊற்றியும் எறும்பு அல்லது பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். அதுவும் குறிப்பாக குழந்தைக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால் உடனே குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
எறும்பு காதுக்குள் சென்றால் ஏற்படும் ஆபத்துகள்;
- எறும்பு காது ஜவ்வு அல்லது சருமப்பகுதியை கடித்து வலியை ஏற்படுத்தும்.
- சில சமயங்களில் எறும்பு கடித்தால் ரத்தக் கசிவு கூட ஏற்படலாம்.
- இது தவிர காது அடைப்பு அல்லது காது தொற்று ஏற்படும்.
