பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழை..! வீட்டில் இருந்தபடியே ரசிக்கும் பொதுமக்கள்..!
வெப்பச்சலனம் காரணமாக சென்னை , வேலூர் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது
அதன் படி, தற்போது சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும், சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கோடைக்காலம் தொடங்கிய நாள் முதலே பெரிய அளவில் எந்த பகுதியிலும் மழை இல்லாமல் இருந்தது. கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை , வேலூர் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். எனவே வீட்டில் இருந்தபடியே சில்லென்ற மழையை ரசிக்கின்றனர்.