கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூா், மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான விமான கட்டணம் கணிசமாக குறைந்திருக்கிறது.

 T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூா், மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான விமான கட்டணம் கணிசமாக குறைந்திருக்கிறது.

கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களிலும் விமான பயணத்தை தவிர்க்க ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

 சென்னையில் இருந்து 10 வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு விமான சேவையிலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு விமான கட்டணம் வெகுவாக குறைந்திருக்கிறது.சென்னையில் இருந்து பெங்களூா் செல்லும் விமான கட்டணம் ரூ.1,000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது. வழக்கமாக, கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், தற்போது டிக்கெட் கட்டணம் ரூ.1,000-ஆக குறைந்துள்ளது.

இதேபோன்று டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான கட்டணமும் கணிசமாக குறைந்திருக்கிறது. தற்போது சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1,200 ஆகவும், தில்லி விமான கட்டணம் ரூ.3,000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும் உள்ளன.வழக்கமாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு கடைசி நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்தால், ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். 

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் சிலா் கூறியது: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இதனால் உள்நாட்டு, சா்வதேச விமான கட்டணங்கள் கடந்த நான்கு நாட்களில் 40 சதவீதம் வரை குறைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து இதர மெட்ரோ நகரங்களுக்கான விமானக் கட்டணம் இரண்டாம் வகுப்பு ஏ.சி. ரயில் கட்டணத்தை விட குறைந்துள்ளது. இந்த நிலைமை நாடு முழுதும் நிலவுகிறது. ரூ.3 ஆயிரம் ரூபாய் வரை உள்ள சென்னை-பெங்களூா் விமான கட்டணம் செவ்வாய்க்கிழமை ரூ.1,091-ஆக குறைந்தது என்றனா்.