60  வயதிலும் ஆரோக்கியமாக இப்படியும் வாழலாம் ......

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அறுபதுக்கு பிறகு......!!!

ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஓய்வு காலம் என்பது நமக்கு மிக முக்கியமான தருணம்

எதற்கு கட்டுப்பாடு அவசியம்..?

உணவு விஷயத்தில் சரிவிகிதச் சமச்சீர் உணவு சாப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். மேலும், விதவிதமாக சமைக்கச் சொல்லி சாப்பிட விரும்புவார்கள். ஆனால், இந்த வயதில் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றாக மெதுவாக மெல்லவும் :

இரைப்பையின் வேலையைக் குறைக்க உணவை நன்றாக மென்று சாப்பிடுவது நல்லது. அதாவது இனிப்பு, காரம், உப்பு, மசாலா நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால், அதற்கேற்ப உங்கள் உணவை அமைத்துக்கொள்வது நல்லது.

பரிசோதனையின் பலன்கள்

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதற்கேற்றார் போல் நம் வாழ்க்கை முறையையும் மாற்றிகொள்வது நல்லது.

மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்

சிலருக்குப் பல வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ அல்லது இரண்டுமோ இருக்கலாம். தொடர்ச்சியான இந்தப் பழக்கங்களினால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த வயதிலும் அவற்றைத் தொடர்ந்துகொண்டிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகி, குணப்படுத்த முடியாதபடி பல சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.

இயற்கையே சிறந்த மருந்து

மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், இது மற்றவர்களைவிடவும் முதிர் வயதினருக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.

நிம்மதி தரும் நிதி

முதுமைக் காலத்தை நிம்மதியுடன் கழிக்கப் பொருளாதாரமும் காரணமாக அமைகிறது. எனவே, பணியில் இருக்கும்போதே ஓய்வு காலத்துக்கு என தனியாகச் சேமித்து வையுங்கள். இதனால், 'அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியத் தேவையில்லை’ என்கிற தன்னம்பிக்கை கிடைக்கும். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக வீட்டில் உள்ளவர்களிடம் கையேந்தாமல் உங்களிடம் இருக்கும் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் நாம் மேற்கொண்டாலே போதும் அருமையான ஆரோகியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.