விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பிரத்யேக செல்போன் செயலியை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாட்டின் 3ஆவது பெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவையினை சுமார் 1.8 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ஆண்டுதோறும் பயன்படுத்துகின்றனர். செல்போன்களில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு புதிய மொபைல் அப்ளிகேஷனை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் விமான நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சேவையினை வழங்கிவரும் எஸ்ஐடிஏ (SITA) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். மேலும், டிக்கெட் கட்டணத்தை கிரெடிட் கார்டுகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் செலுத்தி கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

அதேபோல, பாஸ்போர்ட்டுகள் மூலம் செக்-இன் செய்வது, போர்டிங் பாஸ் எனப்படும் நுழைவு அனுமதிக்கும் இதன் மூலமே விண்ணப்பிக்கலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இருக்கை தேர்வு மற்றும் அடுத்த 7 நாட்களுக்கான விமான நேர அட்டவணையையும் பயணிகள் இந்த மொபைல் ஆப் மூலமாக அறிந்து கொள்ளலாம்.